நினைவுகளிலிருந்து - 1 . மேன்ஷன் வாழ்க்கையும் -- குதிரை பந்தய அனுபவமும்

           சென்னை , சேப்பாக்கம் , பொதுப்பணித்துறையில் நான்  பணியாற்றிய  காலத்தில்  1966 முதல் ஏப்ரல் 1968 வரை  திருவல்லிக்கேணிசிங்கராச்சாரி  தெருவில் ராமாநுஜகூடம் அருகில் இருந்த விடுதியில்மேன்ஷன் ] தங்கியிருந்தேன் . அந்த விடுதியில் இருந்த 10 க்கும் மேற்பட்ட  அறைகளில்   25 பேர் இருந்தோம் . எல்லாரும் பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. அறை வாடகை ஒருவருக்கு , மாதத்திற்கு ரூ.60 /. அந்த விடுதியில் தெருவை பார்த்தவாறு இருந்த முன்பக்க அறையில் நானும் , ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய நண்பர்  இராமச்சந்திரனும்  [ பாலக்காட்டை சேர்ந்தவர் ] இருந்தோம் . வசதியான இடம் . அலுவலகம் , உணவு விடுதிகள்   [மெஸ் ] , மெரீனா  கடற்கரை , பார்த்தசாரதி கோவில் எல்லாம் மிக அருகில்அலுவலகத்திற்கு தினமும் நான் நடந்தே சென்று வருவேன்

            பக்கத்து தெருவில் இருந்த மித்ரா பவன் அல்லது , பெரிய தெருவில் இருந்த விஜயா  மெஸ்ஸில் வழக்கமாக சாப்பிடுவோம்.  30 சாப்பாடு டோக்கன் கொண்ட ஒரு Ticket Book விலை ரூ. 16 . டீ - காபி  16 பைசா ., நகர பேருந்தில் குறைந்த பட்ச கட்டணம் 10 பைசா , அதிக பட்ச கட்டணம் 75 பைசா . தேரடி தெருவில் இருந்த வைஷ்ணவா  மெஸ்ஸில் சாப்பாடு சுமாராகத்தான் இருக்கும். அதனால் அங்கு செல்வதில்லை.

           அந்த விடுதியில்  எங்கள்  இருவரை தவிர ,, நண்பர்கள்  சீனிவாசன் [தலைமை செயலகம்], கண்ணன் [யூனியன் மோட்டார்ஸ்], ஈஸ்வரன் [இந்தியன் எக்ஸ்பிரஸ்], கோபால் [ காண்ட்ராக்ட் நிறுவனம் ] ஆகிய 6 பேரும் ஒரு குழுவாக இருப்போம்இதில்  ராமச்சந்திரனை தவிர  மற்ற  எல்லாரும் மதுரையை சேர்ந்தவர்கள்.

            வார இறுதி நாட்களில் , ஏதாவது ஒரு நாள் சினிமா சென்று வருவோம்.       திருவல்லிக்கேணி சுற்றியுள்ள தியேட்டர்கள்  --  ஸ்டார் , பாரகன் , காஸினோ , சித்ரா, சாந்தி , வெலிங்டன் , பிளாசா , குளோப் , நியூ  எல்பிஸ்டன் -- எதுவானாலும் நடந்தே சென்று வருவோம். சினிமா டிக்கட் கட்டணம்   ரூ. 1 -16 பைசாசினிமா தவிர்த்து , விடுமுறை நாட்களில் திருநீர்மலை , திருவேற்காடு ,, திருப்போரூர் , மகாபலிபுரம் என்று எதாவது ஒரு இடத்துக்கு   ஒரு நாள் சுற்றுலா சென்று வருவோம். மாத கடைசி நாட்களில் மெரீனா  கடற்கரைதான் பொழுது போக்கு.

           நானும் , ராமச்சந்திரனும் சேர்ந்து  ஹிந்து தினசரி பேப்பர்  வாங்கினோம்.    தினமும் காலை / மாலையில் ஹிந்து பேப்பரை படிப்பது வழக்கம்..சென்னையில் அக்டோபர் முதல் ஜனவரி முடிய  குதிரை பந்தய [ ரேஸ் ] சீசன் . ஹிந்து பேப்பரில் மறுநாள் நடக்கப்போகும் பந்தயங்களில் ,ஒவ்வொரு ரேஸிலும்   பங்கு பெரும் குதிரைகளின் விபரம், எந்த குதிரைக்கு வெற்றி வாய்ப்பு  என்று   "ஸ்போர்ட்ஸ்" பகுதியில் விரிவான குறிப்புகள் வரும்

                                                                                                                            

             நாங்கள் இருவரும் அதை பார்த்து , ஒவ்வொரு ரேஸிலும் எந்த குதிரை  ஜெயிக்கும் என்று குறித்து வைப்போம். ரேஸ் முடிந்த மறுநாள் பேப்பரில் வரும்  ரிசல்ட் முடிவுகளில் , நாங்கள் குறித்து வைத்ததோடு சரி பார்த்தால் ஏதாவது ஒன்றிரண்டு முடிவுகள் சரியாக இருக்கும். ஒருதடவை , டிக்கட் வாங்கி ரேஸ்   விளையாடி பார்க்கலாமே என்று பேசிக்கொண்டோம். மறுநாள் பந்தயத்திற்கு, முதல் நாள் காலை 10 மணி முதல் டிக்கட் வாங்கலாம்

              நாங்கள் இருவரும் ரூ . 5 வீதம்  ரூ. 10 க்கு. 3 பந்தய தொகுப்புக்கு  [ Treble Event ] ஒரு டிக்கட் வாங்க திட்டமிட்டோம். 5 பந்தயங்கள் கொண்ட ஜாக்பாட் [ Jackpot ] தொகுப்பும் உண்டு . அதில் வெற்றி பெற்றால் லாபம் அதிகம் . தோற்றால் இழப்பும் அதிகம். ஒரு சனிக்கிழமை காலை  பஸ்ஸில் கிண்டி சென்று , ரயில் நிலைய நடை மேம்பாலத்தை கடந்து ரேஸ்  கோர்ஸ் மைதானம் சென்றேன். . போகும் வழியில் இரு புறமும் பல்வேறு குறி சொல்பவர்கள் -- கிளி ஜோசியம் , கைரேகை , எண் கணிதம் என்று பலர்  இருந்தார்கள் .   அவர்களில் வெள்ளை புடவை அணிந்த பிராமண விதவை பாட்டியும்   சோழி   போட்டு  பார்த்து குறி   சொல்லிக் கொண்டிருந்தார்கள்

              பந்தயத்திற்கு டிக்கட் வாங்க செல்லும் சிலர் அவர்களிடம் எந்த குதிரை ஜெயிக்கும் என்று குறி கேட்டுக்கொண்டிருந்தார்கள்மறுநாள் ரேஸ் துவங்குவதற்கு முன்பாகவே , குறி சொல்பவர்கள் அனைவரும் இடத்தை காலி செய்து விட்டு சென்று விடுவார்கள்  [ரேஸில்  பணத்தை இழந்து விட்டு வருபவர்களை தவிர்க்க ]. மறுபடி அடுத்த வார ரேஸுக்கு குறி சொல்ல வந்து விடுவார்கள்.

               நான் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு , ரேஸ்கோர்ஸில்   டிக்கட் கொடுக்குமிடம் சென்று , ஏற்கனவே குறித்து வைத்திருந்த 3 குதிரைகளின் வரிசை எண்களை சொல்லி ஒரு டிக்கட்  வாங்கிக்கொண்டு அறைக்கு திரும்பிவிட்டேன். ஞாயிறு அன்று ரேஸ் முடிந்து, மறுநாள் ஹிந்து பேப்பரை பார்த்ததில் , எங்கள் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி . குறிப்பிட்ட 3 குதிரைகளும் ஜெயித்ததால் எங்களுடைய ரூ. 10 டிக்கட்டுக்கு  ரூ . 120  கிடைத்திருந்தது.      அடுத்த நாள் ரேஸ்கோர்ஸ் சென்று டிக்கட்டை கொடுத்து ரூ. 120/- வாங்கி வந்தேன். நண்பர்கள் எல்லாரும் இதை " Beginner's luck என்றனர் . அந்த வார  இறுதியில் நண்பர்களுடன் திருவல்லிக்கேணி  ரத்னா கஃபேயில் டிபன் , காபி சாப்பிட்டு ரேஸ் வெற்றியை கொண்டாடினோம். அதற்கு பிறகு, பேப்பரில்   ரேஸ் குறிப்புகள் பார்ப்பதையும் நிறுத்தி விட்டோம்

            சிங்கராச்சாரி தெருவில் இருந்த எங்கள் விடுதியில் எங்கள் அறையை ஒட்டி முன்புறம் நுழைவு வாசலுக்கு இரண்டு புறமும் பெரிய திண்ணை இருந்தது .தாராளமாக 10 பேர் படுக்க முடியும்.. மாலை நேரங்களில் அந்த திண்ணையில் எல்லாரும் இருப்போம். அந்த தெருவில் இரண்டு திருமண மண்டபங்கள் இருந்தன. அடிக்கடி திருமண ஊர்வலங்கள் நடக்கும். விசேஷ நாட்களில் பார்த்தசாரதி சுவாமி கோயில் சுவாமி வீதி உலா நடக்கும். தேரடி தெருவில் இருந்த பார்த்தசாரதி சபா , மற்றும் . ஐஸ் ஹவுஸ் பகுதியில் , நேஷனல்  பெண்கள் பள்ளி அருகே இருந்த ஒரு அரங்கத்தில் நாடகங்கள் நடைபெறும். சில நாடகங்களும் பார்த்ததுண்டுதெருவின்  தேரடி சந்திப்பு பகுதியிலும் , கெல்லட் ஹைஸ்கூல்   செல்லும் வழியிலும் அரசியல் கட்சி கூட்டங்கள் நடைபெறும் . 1966 - 67 ல்  காங்கிரசை எதிர்த்து ராஜாஜி , பெரியார் , அண்ணாதுரை , .பொ .சி. ஒன்றாக சேர்ந்து நடத்திய கூட்டங்கள் பிரசித்தி பெற்றவை. எங்கள் விடுதி திண்ணையில்  அமர்ந்தபடியே அவர்களுடைய சொற்பொழிவுகளை கேட்க முடிந்தது.. 

                அன்றைய திருவல்லிக்கேணி  [ Bachelor's Paradise ] வாழ்க்கை  அனுபவங்கள்  சுகமான மலரும் நினைவுகள்.

 

 

                                     


Comments