நினைவுகளிலிருந்து - 2 . சென்னை - காவல் நிலைய அனுபவங்கள்

 

                                                                                               

 

             அக்டோபர் 1961 முதல் ஆகஸ்ட் 1964 வரை, சென்னை , தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சர்வேயராக பணியில் இருந்தேன் . அப்போது,  [ புதுப்பட்டி ]   வாலாம்பாள் பாட்டி , அவருடைய மகள் பட்டு சித்தி , மகன் ஸ்ரீனிவாசன்  [ மரியாதைக்குரிய சீனு மாமா ] -- அவர்களுடைய ஆதரவில் , மைலாப்பூர்  புது தெருவில் , 40 ம் எண் வீட்டில் இருந்தேன். அது ஒரு ஒண்டுக்குடித்தன போர்ஷன் . அந்த வீட்டில் 5 குடும்பங்கள் இருந்தனர் .   1962 க்கு பிறகு , மாதவ பெருமாள் கோயில் அருகில் , நாச்சியப்ப  செட்டி தெருவில் இருந்த பெரிய - தனி வீட்டுக்கு நாங்கள் மாறி விட்டோம்.

              புதுதெருவில் இருந்த போது , ஒரு நாள் மாலை 5 - 30 மணியளவில்  பாட்டி என்னிடம் ஒரு கடித்தை கொடுத்து மொபைல் போஸ்ட்டில் போட்டு வர சொன்னார்கள்.அந்தநாட்களில், லஸ் -- காமதேனு தியேட்டர் எதிர்புறம் தினமும் மாலை   5 - 25 மணி முதல் 5 - 50 மணி வரை மொபைல் தபால் வேன் இயங்கும்.     அதில் கார்டு,கவர், ஸ்டாம்ப் விற்பனையுடன் , ரிஜிஸ்டர் தபால்கள்  அனுப்பும் வசதி உண்டுசாதாரண கடிதங்களையும் அதில் போஸ்ட் செய்யலாம். அதில் போஸ்ட் செய்யப்படும் தபால்கள் அடுத்த நாளே அந்தந்த ஊர்களில் டெலிவரி செய்யப்பட்டுவிடும்.

              பாட்டியிடம் கடிதத்தை வாங்கிக்கொண்டு , அருகில் இருந்த வாடகை  சைக்கிள் கடையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு  லஸ் சென்று மொபைல் போஸ்ட் வேனில் தபாலை சேர்த்துவிட்டு திரும்பினேன்வழியில் வடக்கு மாட வீதி திருப்பத்தில் ஒரு காவலர் [ போலீஸ் ] என்னை நிறுத்தினார் . சைக்கிளில் லைட் இல்லாமல் வந்ததற்காக சார்ஜ் செய்வதாக சொன்னார் . நான் அவரிடம் ,   மணி 6 ஆகவில்லை , இருட்ட வில்லை , நல்ல வெளிச்சம் இருக்கிறது , வீடு பக்கத்தில் தான் உள்ளது என்று வாதாடினேன்

              அவர் அதை ஏற்காமல் ,என் பெயர் , விலாசம் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு , சார்ஜ் செய்து விட்டு , மறுநாள் காலை 8 மணிக்கு கச்சேரி ரோடு காவல் நிலையத்தில் உள்ள மொபைல் கோர்ட்டுக்கு வந்து அபராதம் கட்ட சொன்னார். அருகில் உள்ள வாடகை சைக்கிள் கடை என்பதை தெரிந்துகொண்டு     சைக்கிளை என்னிடம் கொடுத்துவிட்டார்சைக்கிளை கடையில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். பாட்டியிடம் எதுவும் சொல்லவில்லை

              வழக்கமாக , நான் காலை 8 மணிக்குள் புது தெரு வீட்டில் புறப்பட்டு மைலாப்பூர் குளக்கரை பகுதியில் பஸ் பிடித்து தி.நகர் பஸ் நிலையம் சென்று , அங்கிருந்து மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி வழியாக அசோக் நகருக்கு வேலைக்கு செல்வேன் .    அன்று காலை சற்று முன்னதாவே கிளம்பி கச்சேரி ரோடு காவல் நிலையம் சென்றேன் .காவல் நிலைய பின்புற வராந்தாவில் மொபைல் கோர்ட் இருந்தது .

         என்னைப்போல 3 - 4 பேர் வந்திருந்தார்கள். மாஜிஸ்திரேட் நல்ல சிவந்த உடல்வாகு. நெற்றியில் ஸ்ரீசூர்ணம் திருமண் .பார்த்தாலே ஆச்சாரமான வைஷ்ணவர் என்று தெரிந்தது .முதலில் காவலர் என்னை அழைத்தார் .     மாஜிஸ்திரேட் என்னிடம் சைக்கிளில் லைட் இல்லாமல் சென்றாயா என்று கேட்டார் . ஆமாம் என்றேன். இனிமேல் அப்படி செய்யாதே என அறிவுரை சொல்லிவிட்டு ரூ. 1 மட்டும் அபராதம் கட்டிவிடு என்றார். ஒரு ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, உடனே வேலைக்கு சென்றேன்.. மாலை 6 மணிக்கு மேல் வீடு திரும்பினேன் .அப்போதும் பாட்டியிடம் எதுவும் சொல்லவில்லை

             சீனு மாமா லாரி ஆபீசிலிருந்து  இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வருவார்.. நான் அதற்குள் தூங்கி விடுவேன். மறுநாள் காலை வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது மாமா எழுந்துவிட்டார் . படுக்கையில் அமர்ந்தபடியே , என்னிடம் அசோக் நகர் கிளம்பியாச்சா என்றவர் , எங்கே நேற்று காலை கச்சேரி ரோடு பக்கம் போனாயா என்றார் . நான் அவசரமாக வேலைக்கு போகிறவன் , எனக்கு கச்சேரி ரோடில் என்ன வேலை என்றேன். அங்கே  போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போயிருந்தாயோ என்று தோன்றியது என்றார் . மாமா, உங்களுக்கு கற்பனை ஜாஸ்தி என்றேன். . அவர் விடவில்லை . அடுத்து , மாஜிஸ்திரேட் ஐயங்காரா என்று கேட்டார் . அவ்வளவுதான் . சரண்டர்.    விஷயம் முழுவதையும் சொல்லி விட்டேன்.      பிறகு , அவர் பாட்டியிடம் சத்தம் போட்டு , ஏன் மறுநாள் தபாலாபீஸில் போஸ்ட் செய்யக்கூடாதா என்றார்

              மாஜிஸ்திரேட் ஐயங்கார் , மாமாவுக்கு நண்பர் என்பதும்,    நான் காவலரிடம் சரியான விலாசம் கொடுத்திருந்ததால் என்னை தெரிந்துகொண்டு விட்டார் என்பதும் பிறகு தெரிந்தது . கோர்ட்டில் அபராதம் கட்டிவிட்டு சென்றவுடனேயே  , அவர் மாமாவுக்கு  லாரி ஆபீஸுக்கு போன் செய்து , "  சீனிவாசா , உன் மருமான் இருப்பதாக சொல்லியிருந்தாயே - அவன் ஸ்டேஷனுக்கு வந்தான் , ஒரு ரூபாய் அபராதம்போட்டு அனுப்பிவிட்டேன் " என்று சொல்லியிருக்கிறார். இதுவும் எனக்கு தாமதமாக தெரிந்தது .

               1961 - 62 ஆண்டுகளில் வீட்டு வசதி வாரியத்தால் அசோக் நகர் உருவாகிக் கொண்டிருந்தது. அதன் பிறகு கே.கே, நகர் திட்டமிடப்பட்டு  விரிவுபடுத்தப்பட்டதுஅப்போதெல்லாம் தி .நகரிலிருந்து அசோக் நகருக்கு போக்குவரத்து வசதி இல்லை . சைக்கிள் அல்லது கை ரிக் ஷா  , இல்லாவிட்டால் நடக்க வேண்டும்.. அசோக் நகரிலிருந்து மதிய உணவுக்கு , வேலை இருக்கும் பகுதியை பொறுத்து வடபழனி அல்லது மாம்பலம் பஸ்  நிலையம் அருகே சாப்பிட வரவேண்டும். ஒரு நாள் நானும் , என்னுடன் பணியில் இருந்த    [ J.E]  இளங்கோ என்பவரும் ஒரே சைக்கிளில் சென்று  மாம்பலம் பஸ் நிலையம் பகுதியில்  ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ,அசோக் நகர் திரும்பிக்கொண்டிருந்தோம். வழியில் போஸ்டல் காலனி சாலையில் ஒரு காவலர் எங்களை தடுத்து நிறுத்தினார் .ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி. சைக்கிளில் இரண்டு பேர் சென்றதால் சார்ஜ் செய்ய , ஜூபிலி ரோடிலிருந்த காவல் நிலையத்துக்கு தன்னுடன் வரச்சொன்னார். நாங்கள் வீட்டு    வசதி வாரியத்தில் பணி  புரியும் பொறியாளர்கள் , சாப்பாட்டுக்குப்பின் வேலைக்கு செல்கிறோம் என்று சொன்னதை அவர் கேட்கவில்லை.    ஸ்டேஷனுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு அவர் தன் சைக்கிளில் ஏறினார். நாங்களும் எங்கள் சைக்கிளில் ஏறும்போது , எங்களை தடுத்து   இருவரும் சைக்கிளில் வரக்கூடாது என்று சொல்லி, அவரும் தன் சைக்கிளிலிருந்து இறங்கினர்மூவரும் சைக்கிளையும் தள்ளிக்கொண்டு    போஸ்டல் காலனியிலிருந்து ஜூபிலி ரோடு ஸ்டேஷன் வரை நடந்தோம்.   அங்கு எங்களை சார்ஜ் செய்து, சைக்கிளையும் ஸ்டேஷனில் வாங்கி வைத்துக்கொண்டு ,மறுநாள் காலை 9 மணிக்கு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு   வரச்சொன்னார். கோர்ட்டில் அபராதம் கட்டி , ரசீதை ஸ்டேஷனில் காட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

               பிறகு நடந்தே வேலைக்கு சென்றோம்.   எனக்கு பயமாகி விட்டது.    கோர்ட் சென்று அபராதம் கட்டுவதற்காக இல்லை. என் அம்மாவின் சித்தப்பா   வெங்கட்ராம ஐயர்        [ வெங்கிட்டு சித்தப்பா , ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர் ]    அப்போது கௌரவ மேஜிஸ்திரேட்டாக இருந்தார். எந்த கோர்ட்டில் இருக்கிறார் என்று தெரியாது. அவர் முன்னால்  என்னை நிறுத்தி விடுவார்களோ என்று பயம்.  ஆழ்வார்பேட்டை , சீதம்மா காலனியில் அவர் வீடு.   அவரது 3 வது மகன் சந்திரா      [ DR . கோபால் மாமாவின் தம்பி ]  எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன்அன்று மாலை சீதம்மா காலனி சென்று அவனை .பார்த்து பேசிவிட்டு வந்தேன்.   சாதாரணமாக பேசிக்கொண்டே, அவனிடம் " அப்பா , எந்த  கோர்ட் போகிறார்என்று கேட்டேன் . எழும்பூர்   [ எக்மோர்] கோர்ட்  என்றான். கொஞ்சம் பயம் விட்டது.   மயிலாப்பூர் வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

               மறுநாள் வேலைக்கு செல்லும் முன், காலை 9 மணிக்குள்  சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு சென்றேன். JE  இளங்கோவும் வந்துவிட்டார் .   பழக்கமில்லாத அந்த கோர்ட் சூழ்நிலை அப்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. முதலில் வேறு ஒருவரை அழைத்து விசாரித்தார்கள் . பிறகு எங்கள்    இருவரையும் அழைத்தார்கள் . எங்களை விசாரித்துவிட்டு , இரண்டு பேருக்கும்    தலா ரூ. 3 அபராதம் , கட்ட தவறினால் 3 நாள் வெறும் காவல் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் . நாங்கள் இருவரும் உடனே ரூ . 3 வீதம்   அபராதம் செலுத்தி , ரசீதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம்.

               வெளியில் வந்தபிறகு , இளங்கோ என்னிடம் " சங்கரன் சார் , அபராதம் கட்டாவிட்டால் 3 நாள் வெறும் காவல் என்று மாஜிஸ்திரேட் சொன்னாரே | ஆபீஸில் 3 நாள் கேஷுவல் லீவு சொல்லிவிட்டுஉள்ளே   எப்படி இருக்கிறது என்று பார்த்து வந்திருக்கலாம் ." .என்றார்

               அவரிடம் , நான் ரசீது வாங்கிவிட்டேன் . பிற்பகலில் ஸ்டேஷன் சென்று சைக்கிளை மீட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக ஆபீஸில் லீவும்   சொல்லி விடுகிறேன் . நீங்கள் சென்று 3 நாள் இருந்து   பார்த்து வாருங்கள் என்றேன். சிரித்தபடியே இளங்கோவும் என்னுடன் அசோக் நகர் திரும்பினார் .    அன்று மாலை ஸ்டேஷன் சென்று சைக்கிளை எடுத்து வந்தோம்

       அப்போதெல்லாம் சைக்கிளில் லைட் இல்லாமல் போவது , ஒரே சைக்கிளில் இரண்டு பேர் [ Doubles } செல்வது  குற்றம் என்று சார்ஜ் செய்வார்கள் .    ரூ . 1 அல்லது 2 என கொடுத்தாலும் காவலர்கள் வாங்க மாட்டார்கள்

              இப்போது போல உடனடி அபராதம் [ Spot Fine ] செலுத்தும் திட்டம்   அப்போது இல்லை.   சென்னையில் நான் இருந்த ஆறு ஆண்டு காலத்தில்    இப்படியும் சில அனுபவங்கள்  நினைவில் நிற்பவை..

 

Comments